சிறுபான்மை வாக்கு வேண்டாம் என்போர் பின்னர் நாட்டில் இருக்க கூடாது என்பார்கள்

சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வேண்டாம் என்பவர்கள், எதிர்காலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் இருக்க கூடாது என்பார்கள். அனைவரும் இந்த விடயத்தில் சிந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-,

கடந்த காலத்தில் கிறிஸ் மனிதன் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் கோட்டாபய ராஜபகக்ஷ எவ்வளவு துன்பப்படுத்தினார் என்பதை தன்மானமுள்ள எந்தவொரு தமிழ், முஸ்லிம் சமூகமும் மறந்து விட முடியாது.

கோட்டாபய ராஜபகக்ஷவின் குடும்ப உறவுகள் எவ்வாறு உள்ளது என்றால் தமிழர்களுக்கு அடித்து விட்டோம், முஸ்லிம்களுக்கு அடிக்க வேண்டும். எதிர்காலத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கும் அடித்து பணிய வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கருணா அம்மான், பிள்ளையான், வியழேந்திரன் போன்றவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு எந்தவொரு தன்மானமுள்ள தமிழனும் வாக்களிக்க மாட்டான் என கூறிய வியாழேந்திரனை போன்றவர்கள் இப்போது அவர்களுக்கு வாக்கு தேடித் திரிகின்றார்கள் என்றால் தன்மானமிக்க தமிழ் மக்களே தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தன்மானத்தோடு வாழ்கின்றவர்கள் என்ற செய்தியை சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். ராஜபக்ஷ காலத்தில் தான் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட விடயத்தை பற்றி பாராளுமன்றத்தில் வியாழேந்திரன் எம்.பி பேசினார். இவ்வாறெல்லாம் பேசிவிட்டு ராஜபக்ஷ குடும்பத்துக்கு வாக்கு கேட்கின்றார்கள்.

சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வேண்டாம் என்று கூறியவர்கள். எதிர்காலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் இருக்க கூடாது என்பார்கள். அவ்வாறானால் நாம் கடலிலா கொண்டு விழுவது. எனவே அனைவரும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளுங்கள் என்றார்.

கல்குடா தினகரன் நிருபர்

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை