இலங்கை - பாகிஸ்தான் முதல் 20க்கு20 போட்டி இன்று லாஹூரில்

இலங்கை–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று 5ம் திகதி லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை–- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளதுடன், தொடரை பாகிஸ்தான் அணி 2-–0 என கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்த போதும், அனுபவமற்ற இளம் இலங்கை அணி சிறந்த போட்டித் தன்மையுடன் விளையாடியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் செஹான் ஜயசூரிய, தசுன் ஷானக ஆகியோரது துடுப்பாட்ட இணைப்பாட்டம் மற்றும் இரண்டாவது போட்டியில் அறிமுக வீரர் மினோத் பானுக மற்றும் தனுஷ்க குணதிலக்க உட்பட இலங்கை அணியின் துடுப்பாட்டம் நம்பிக்கை தரக்கூடிய அம்சமாக அமைந்திருந்தது

இரண்டு அணிகளையும் பொறுத்தவரை ஒருநாள் அணியிலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஒருநாள் போட்டிகளுக்கான அணித் தலைவர் லஹிரு திரிமான்ன 20 க்கு 20 அணியில் இணைக்கப்படாத நிலையில், இலங்கை 20க்கு 20 அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளார். ஒருநாள் தொடரில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவர், 20க்கு 20 போட்டிகளில் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள போதும், 20க்கு20 போட்டிகளில் சிறப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரில் நடைபெற்ற 20க்கு 20 தொடர்களில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த வீரர்களே இந்த 20க்கு 20 அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களால், ஒருநாள் போட்டிகளையும் விட, 20க்கு 20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணியை விட பலமான அணியாக உள்ளது. அதுமாத்திரமின்றி 20க்கு20 தரவரிசையில், முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரானது அதிகமான சவாலை கொடுக்க வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் 20க்கு 20 அணியில், ஒருநாள் குழாத்திலிருந்து மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நீண்ட நாட்களுக்கு பின்னர், உமர் அக்மல் மற்றும் அஹமட் சேஷாட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகை பாகிஸ்தான் அணியை மேலும் வலுவுடையதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணி தங்களுடைய சொந்த இரசிகர்களுக்கு முன்னாள் முழுமையான தொடர் கொண்ட 20க்கு20 போட்டியில் விளையாடுவது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவும் அமையும்.

எவ்வாறிருப்பினும் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அனுபவம் இல்லாவிட்டாலும் 20க்கு20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதையும் செய்யும் வீரர்களைக் கொண்டுள்ளமையினால், லாஹூரில் எதுவும் நடக்கலாம்.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 18 20க்கு 20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 13 போட்டிகளின் வெற்றிகளை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளதுடன், வெறும் 5 போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்களின்படி பார்க்கும் போது, இரண்டு அணிகளும் 6 இருதரப்பு தொடர்களில் மோதியுள்ளன. இதில், 4 தொடர்களில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளதுடன், 2 தொடர்கள் சமனிலையில் முடிவுடைந்துள்ளன. இதில், இறுதியாக நடைபெற்ற (2017) தொடரை பாகிஸ்தான் அணி 3-–0 என கைப்பற்றியிருந்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி எந்தவொரு இருதரப்பு 20க்கு20 தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரையடுத்து 20க்கு20 தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்துள்ளன.

உலகின் முதற்தர 20க்கு20 அணியை எதிர்கொள்ள இலங்கையின் அனுபவம் குறைந்த இளம் அணி தயாராகியுள்ளது. இந்த அணியை எதிர்கொள்வது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரும் சவால் இல்லாவிட்டாலும், இலங்கை அணி திடீர் அதிர்ச்சிகளை எதிரணிகளுக்கு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, இந்த தொடரானது மிகவும் சுவாரஷ்யமாக அமையும்.

இவை அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களின் பின்னர் விருந்து படைக்கக் கூடிய ஒரு தொடராகவும் இந்த 20க்கு20 தொடர் இடம்பெறவுள்ளது.

Sat, 10/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை