பாணந்துறை ஹிரணை, கல்துடே பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது காதலனுடன் கார் ஒன்றில் பயணித்தபோது, ஹிரணை பகுதியில் அமைந்துள்ள பொல்கொடை ஏரியில் கார் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அப்பெண் உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றின் சேவை செய்யும் குறித்த பெண்ணும் களுத்துறை வடக்கு பகுதியில் வசிக்கும் 43 வயதான ஒருவருடன் சேவை முடிந்து வீடு நோக்கி செல்லும் வழியில், மாலை வேளையில் பொல்கொடை வாவிக்கு அருகில் சென்று காரை நிறுத்தி சற்று நேரம் இருவரும் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு மீண்டும் 7.00 மணியளவில் புறப்படும் நோக்கில் காரை ஸ்டார்ட் (start) செய்ததாகவும் சற்றும் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து முன் நோக்கி சென்று பொல்கொடை வாவியில் புரண்டு வீழ்ந்துள்ளதாக, கார் சாரதி ஸ்தலத்தில் வழங்கிய வாக்குமூலத்தின்போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இதன்போது கார் சாரதியான காதலன் திறந்து இருந்த கதவு கண்ணாடி வழியே பிரதேசவாசிகளின் உதவியுடன் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியே வந்து உயிர் தப்பியுள்ளார்.
தகவல் அறிந்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பாணந்துறை தெற்கு பொலிஸார் மூலம் 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டது. காரை கயிற்றில் கட்டி ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிட போராட்டத்தின் பின்னர் மேலே இழுத்து நீரில் மூழ்கிய இருந்த பெண்ணை வெளியே எடுத்து முதலுவிகளும் வழங்கப்பட்ட பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(களுத்துறை சுழற்சி நிருபர் –நரேன் ஜயரட்னம்)
from tkn