டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை சுற்றுலா பயணிகளுடன் பார்வையிடச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல்போனதை அடுத்து அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் மீட்புக் குழுக்கள் அதனை தேடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
ஐந்து பேருடன் நீருக்குள் மூழ்கி சுமார் ஒரு மணி மற்றும் 45 நிமிடங்களில் அந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பை இழந்துள்ளது.
அட்லாண்டிக் கடல் மத்தியில் இரவு முழுவதும் தேடுதல் இடம்பெற்றபோதும் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை.
அரச நிறுவனங்கள், இரு நாட்டு கடற்படைகள் மற்றும் ஆழ் கடல் வர்த்தக நிறுவனங்கள் இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவி வருகின்றன.
அந்த நீர் மூழ்கிக் கப்பலில் இருப்பவர்களுக்கு நான்கு நாட்களுக்குத் தேவையான ஓட்சிசனே இருப்பதாக கடந்த திங்கட்கிழமை நண்பகலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிரிட்டன் நாட்டு பெரும் செல்வந்தர் ஹேமிஷ் ஹார்டிங்கும் உள்ளார்.
இந்த தேடுதல் நடவடிக்கையில் இராணுவ விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மற்றும் சோனோபோய் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1912 ஆம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் நியூபெளன்ட்லாண்ட் தீவின் செயிட்ன் ஜோன்ஸ் நகரில் தெற்காக சுமார் 435 மைல்கள் தொலைவில், 4 கி.மீ ஆழத்தில் உள்ளது.
காணாமல்போயிருக்கும் நீர்மூழ்கிக் கப்பல் 10,432 கி.கி எடையுடன் 13,100 அடி ஆழம் வரை செல்லக் கூடியது என்று அதற்கு உரிமையான நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பலை பார்வையிடுவது உட்பட நீர்மூழ்கிக் கப்பலில் எட்டு நாள் சுற்றுப் பயணத்திற்கான டிக்கெட் விலை 250,000 டொலர்கள் என அந்த இணையத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
from tkn