வடக்கில் விளையாட்டுத் துறையை முன்னேற்ற தேவையான நடவடிக்கை

நிதி ஒதுக்கீடு உட்பட சகலதும் ஏற்பாடு - அமைச்சர் நாமல்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவும் வவுனியா, மன்னார், யாழ். மாவட்ட விளையாட்டு பாடசாலைகளை முன்னேற்றவும் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். இவற்றுக்கு தேவையான நிதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காணி தெரிவு செய்யப்பட்டு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அந்தக் காணிக்கு தனியார் உரிமையாளர் ஒருவர் உரிமை கொண்டாடும் நிலையில் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட விளையாட்டு மைதானம் 32 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இணைப்பு குழு அனுமதி பெறப்படவுள்ளதோடு 2021 இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

மன்னார் எமில் நகர பொது விளையாட்டு மைதான பணி தொல்பொருள் பிரச்சினையால் தடைப்பட்டது. அந்தப்பிரச்சினை தற்போது தீர்ந்துள்ளது. விளையாடக் கூடிய நிலையில் மைதானம் உள்ளதால் அதனை பயன்படுத்த முடியும். எதிர்வரும் காலத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வடக்கிலுள்ள விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.தேவையான நிதி ஒதுக்கப்படும்.கடந்த காலத்தில் கிளிநொச்சியில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் அது பயன்பாடின்றி நாசமடைந்தது.அரசியல் நோக்கில் கட்டடங்கள் கட்டுவதால் பயனில்லை.தேவையான வசதிகளை நாம் வழங்குவோம். வவுனியா, மன்னார், யாழ் மாவட்டங்களில் விளையாட்டு பாடசாலைகளை முன்னேற்றவும் அவற்றுக்கு 200 ஓடுபாதை நிர்மாணிக்கவும் இருக்கிறோம்.130 மீற்றர் செயற்கை ஓடுபாதை அமைக்கவும் இருக்கிறோம்.

மன்னாரில் விளையாட்டு பாடசாலை கிடையாது. கல்வி அமைச்சு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை