நீர்நிலைகளின் அபிவிருத்திக்கு உதவ நோர்வே தயார் நிலையில்

டக்ளஸிடம் நோர்வே தூதுவர் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொனார்லி எஸ்கெண்டல் நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவை மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது மேலும் தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் அங்கம் வகித்து சென்ற போது, நீர் வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் நீர் வேளாண்மையில் நோர்வே வெற்றிகரமாக செயற்பட்டு வருவதை தன்னால் அவதானிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 92 களப்பு நீர்நிலைகள் காணப்படுகின்ற நிலையில் நோர்வே அரசாங்கம் இவ் விடயத்தில் தன்னுடைய பொருளாதார மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதுடன் தமது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அமைச்சரின் இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நோர்வே தூதுவர், ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் சார் அபிவிருத்தி திட்டங்களுக்கு நோர்வே பெருமளவு நிதியை செலவிட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அமைச்சர் கேட்டுக் கொண்டதைப் போன்றுதொழில் நுட்ப உதவி உட்பட்ட உதவிகளை வழங்குவததோடு அனுபவங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாவும் தெரிவித்தார். மேலும், கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களிலும் நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்துடனும் இணைந்து செயற்பட நோர்வே அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நோர்வேயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடிப் படகுகளை உருவாக்குதல் மற்றும் மீன்களை பழுதடையாமல் பாதுகாத்து பதனிடுதல் மற்றும் களஞ்சிப்படுத்தல் செயற்பாடுகளை இலங்கையில் விருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குதவற்கும் நோர்வே ஆர்வமாக இருப்பதாகவும் தெரித்தார்.

 

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை