லா லிகா கால்பந்து; ரியல் மட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது

20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சம்பியனான ரியல் மட்ரிட் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள எஸ்பன்யோல் கழகத்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ரியல் மட்ரிட் அணி வீரர்கள் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும், எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பது அந்த அணிக்கு சவாலாகவே இருந்தது. முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி கோல் அடித்தது. அந்த அணியின் கரிம் பென்ஜிமா பின் குதிகாலால் அற்புறமாக தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் கேஸ்மிரோ கோலுக்குள் திணித்தார்.

பின் பாதியில் பதில் கோல் திருப்ப எஸ்பன்யோல் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. ரியல் மட்ரிட் அணி மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளும் கைநழுவிப்போனது. முடிவில் ரியல் மட்ரிட் அணி 1--0 என்ற கோல் கணக்கில் எஸ்பன்யோல் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பு காரணமாக போட்டியில் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு ரியல் மட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ரியல் மட்ரிட் அணி, நடப்பு சம்பியன் பாசிலோனா கழகத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மீண்டும் தனதாக்கியது. ரியல் மட்ரிட் அணி 32 ஆட்டத்தில் விளையாடி 21 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 71 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை