அரசியல் செய்வது இலகுவான விடயமல்ல என்கிறார் ஹக்கீம்
இந்த சமூகத்தின் இருப்பையும், அடையாளத்தையும் பாதுகாக்கின்ற பாரிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. நமது உரிமைகளை பறிப்பதற்கும் அனுபவமுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தோற்கடிக்கவுமே சில கத்துக்குட்டிகளை களமிறக்கியுள்ளார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காாங்கிரசின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அங்குறணையில் நடைபெற்ற பிரதேச இளைஞர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஏ.ஸீ.எஸ்.ஹமீத் போன்ற ஓர் அரசியல் ஞானியை உருவாக்கிய மண் இது . அரசியல் என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல.அதனை இலகுவானது என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏ.ஸீ.எஸ் ஹமீதின் இறுதிக்காலத்தில் அவருக்கும் தலைவர் அஷ்ரபுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவி வந்ததது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள்.
விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை என்பது அவர்களுக்கே முழு நிர்வாகத்தையும் வழங்கவேண்டும் என்ற வகையிலான சட்டவரைவொன்றை அவர்கள் முன் வைத்தார்கள். வடகிழக்கில் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் .அவர்களுக்கு இந்த நிர்வாகத்தில் என்ன பங்கு உள்ளது? இப்படி பல முரண்பாடுகள் காணப்பட்டன. இதே நேரத்தில் ரணில் விக்ரமசிங்க எம்மிடம் இந்த இடைக்கால நிர்வாக அலகினை வழங்குவது தொடர்பில் கருத்துக்களை கேட்டார். அதில் உள்ள குறைபாடுகளை எமது அணி முன்வைத்தது.
எனவே இடைக்கால நிர்வாக சபையினை புலிகளுக்கு வழங்க அன்றைய ரணில் விக்ரமசிங்கவின் அரசு இணங்கவில்லை. ஒருவேளை ரணில் அதற்கு இணங்கி இருந்திருந்தால் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருப்பார்.
தேவையான சந்தர்ப்பத்தில் இந்த சமூகத்தின் இருப்புக்கு குந்தகம் ஏற்படுகின்றபோது அவற்றை நாங்கள் நேருக்குநேர் முகம்கொடுத்து எமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளோம்.
ரத்ன தேரரின் உண்ணாவிரதம், ஞானசார தேரரின் கொதிப்பான பேச்சு என்பன பற்றி உங்களுக்கு தெரியும். அதன்போது நாங்கள் கூட்டாக இராஜினாமா செய்ததன்மூலம் இந்த சமூகத்திற்கெதிரான திட்டமிடப்பட்ட பாரிய வன்முறையை நிறுத்த முடிந்தது.
from tkn