முஸ்லிம் சமூகத்தை தவறாக வழி நடத்த சிலர் தீவிர முயற்சி

அவதானமாக இருக்குமாறு ஏ.எல்.எம். உவைஸ் வேண்டுகோள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி, பிரதமரை மிக மோசமாக விமர்சித்து முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்கிய சில அரசியல் சக்திகள் முஸ்லிம் வாக்கு வங்கியை சூறையாடுவதற்கு தவறாக வழிநடத்தப்பட்டனர். அதன் மூலம் சமூகம் கைகளை சுட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொள்ள முடியாது என்பதை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளர் ஏ. எல்.எம். உவைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

முஸ்லிம் சமூகம் தேசியக் கட்சிகளிலிருந்து விலகி நிற்பதால் எமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம்கள் தனிமைப்படுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகும் என அவர் தினகரனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போது தெரிவித்தார்.  

அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருக்கப் போவதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த ஆட்சியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட உவைஸ் ஹாஜியார் பொதுஜன பெரமுன சார்பில் களமிறக்கப்பட்டுள்ள எட்டு வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்து தேசியப் பட்டியல் மூலம் வழங்கப்படவுள்ள இரண்டு எம். பி.க்களுடன் பத்துப்பேரும் தெரிவாவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.   பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக் கொண்டு தம்மால் எதனையும் சாதிக்க வியலாது. பெரும்பான்மை இனத்தை எமது நேச சக்திகளாக அரவணைத்துச் செயற்பட வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிக்கு வந்து எட்டு மாதங்களில் ஒரு தடவையேனும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பேசியுள்ளாரா?. இந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போது முஸ்லிம்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

அதன் மூலம் முஸ்லிம்கள் கூடுதல் பயனை அடைந்து கொள்ள முடியும் எனவும் உவைஸ் ஹாஜியார் முஸ்லிம் சமூகத்துக்கு விடுத்த செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

எம். ஏ. எம். நிலாம்  

Thu, 07/09/2020 - 05:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை