இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையை நடத்துமாறு இந்திய அரசையும் இந்திய கிரிக்கெட் சபையையும் அரவிந்த டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தான் இனியும் அமைதியாக இருக்கபோவதில்லை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்றும் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் இக் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இருந்திருந்தால் கடந்த 9 வருடங்களாக ஏன் அமைதியாக இருந்தார் என்று அரவிந்த டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற ஆட்டநிர்ணயத்தின் போது தாம் எந்த ஒரு வீரரையும் தொடர்புபடுத்தி குறிப்பிடவில்லை எனவும் கிரிக்கெட் துறையில் உள்ள அதிகாரிகளையே தாம் குறிப்பிட்டதாகவும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணியின் தெரிவுக்குழுவில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியில் செய்யப்பட்ட 4 மாற்றங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்துள்ள அப்போதைய தெரிவுக்குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இக் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையின் முன் முன்வைக்குமாறும் கோரியுள்ளார்.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை