மலையக பல்கலைக்கழகத்துக்கு அடுத்த பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு

உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுமென்றும் பாத கல்வியியற் கல்லூரி தரமுயர்த்தப்பட்டு, அடுத்தாண்டு முதல் பட்டம் வழங்கப்படும் எனவும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக ஹற்றனுக்கு நேற்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன,தனது பணிகளை முடித்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர் கணபதி கனகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை தொடரக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுமென ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்ட அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை பார்வையிடுவதற்காகவே கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டேன்.இதன்படி கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமும் பல்கலைக்கழக கல்லூரியாக தரமுயர்த்தப்படும்.

அதேபோல் கொட்டகலையில் சகல வசதிகளுமுள்ள பல்கலைக்கழகமும் அமைக்கப்படும். அமைச்சரவை அனுமதி பெற்றப்பட்டு அடுத்தாண்டுக்கான பாதீட்டில் நிதியும் ஒதுக்கப்படும்.

பொயிறியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உட்பட முக்கிய விடயங்களை கற்று, கண்டுபிடிப்பா ளர்களாகவும், நிர்மாணிப்பாளர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்களுக்கு கிடைக்கும் சிறப்பானதொரு வரப்பிரதாசம் இதுவாகும்.

நாட்டிலுள்ள கல்வியல் கல்லூரிகள் பல்கலைக்கழக தரத்துக்கு தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இதன்படி ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியும் தரமுயர்த்தப்படும். அங்கு தற்போது டிப்ளோமாவே வழங்கப்படுகின்றது.

அடுத்தாண்டு முதல் கல்வி தவணைக்காலம் ஓராண்டு அதிகரிக்கப்பட்டு, பட்டம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. மேலும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் - என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,

"அமைச்சர் கூறியதுபோல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கட்டங்கட்டமாக நடவடிக்கை எடுப்பார். கடந்த மூன்று மாதங்களுக்குள் பல நிறைய விடயங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்தாண்டுகளில் அவர்கள் செய்யாத விடயங்கள்கூட செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை