இஸ்ரேல் படையால் மூன்று பலஸ்தீனர் சுட்டுக் கொலை

காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவி படையினர் மீது வெடிகுண்டை வீசியதாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய துருப்புகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதை என்னால் உறுதி செய்ய முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையை பயன்படுத்தி மத்திய காசாவில் இருந்து இந்த மூன்று பலஸ்தீனர்களும் இஸ்ரேலுக்குள் 400 மீற்றர் வரை ஊடுருவிய நிலையிலேயே அவர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய வானோலி குறிப்பிட்டுள்ளது.

இதில் 18 வயது இளைஞர்கள் இருவரும் 17 வயது கொண்ட ஒருவருமே சுட்டுக்கொல்லப்பட்டதாக காசா பொலிஸ் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் போராட்்டக் குழுக்களுடன் தொடர்புபட்டவர்கள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கும் பொலிஸார், இவர்கள் குண்டு வீசியதாக இஸ்ரேல் கூறும் கூற்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹமாஸ் ஆட்சியில் உள்ள 2 மில்லியன் மக்கள் வாழும் காசா பகுதி இஸ்ரேலின் முற்றுகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை