உடல்வலி தைலத்தை அருந்திய குழந்தை பரிதாப உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளியில் சம்பவம்

மட்டக்களப்பு-, வெல்லாவெளி - தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்திய ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த சிறுவனை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று முன்தினம் (04) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறு உயிரிழந்தவர் ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதமுடைய சிறுவனாவான்.

சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு சம்பவ தினம் உறவினர்களின் பராமரிப்பில் குழந்தை தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை