பொலிவிய ஜனாதிபதி பதவியில் இருந்து எவோ மொராலஸ் விலகிய நிலையில் அந்நாட்டு எதிர்க் கட்சி செனட் உறுப்பினரான ஜன்னீனே யான்யிஸ் இடைக்கால ஜனாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.
அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் வரிசையில் அடுத்த நிலையில் தாம் இருப்பதாக ஜன்னீனே குறிப்பிட்டுள்ளார்.
பொலிவிய அரசியலமைப்பு நீதிமன்றம் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும் மொராலஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செனட் அமர்வை புறக்கணித்திருப்பதோடு, “யான்யிஸ்் சதித்திட்டத்தை கிளப்பிய வலதுசாரி செனட்டர்” என்று மொராலஸ் சாடியுள்ளார்.
உயிராபத்துக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மொராலஸ் மெக்சியோவில் தஞ்சமடைந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை மொராலஸ் பதவியில் இருந்து விலகினார். பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், மேலும் இரத்தம் சிந்தாமல் இருக்க தானே பதவி விலகியதாக கூறினார்.
பொலிவியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற முதலாவது மண்ணின் மைந்தரான மொராலஸ் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் படைத்தலைவர் வெளிப்படையாக அறிவித்த பின்னர், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக மொராலஸ் அறிவித்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை செனட் அவையின் கட்டுப்பாட்டை தற்காலிகமாக பெற்ற ஜன்னீனே யான்யிஸ் ஜனாதிபதிக்கு அடுத்து அதிகாரம் பெற்ற வரிசையில் இடம்பெற்றார்.
பலர் பதவி விலகியதை தொடர்ந்து, முன்னாள் செனட் அவையின் துணைத் தலைவரான இவர், இந்த அதிகாரத்தை பெற்றார்.
மொராலசின் சோசலிச இயக்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் இல்லாத நிலையில், ஜன்னீனே யான்யிஸ் தன்னைதானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார்.
கோக்கோ விவசாயியான மோராலஸ் 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமை ஒழிப்பு, பொலிவியாவின் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளால் இவர் பெரும் புகழ்பெற்றார்.
ஆனால், அரசியல் சாசன விதிகளுகளுக்கு முரணாக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு மொராலஸ் போட்டியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தன்னை பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்திய ”இருண்ட அதிகாரங்களை” எதிர்க்க வேண்டுமென மொராலஸ் தனது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தியிருந்தார்.
from tkn