தென் கடலில் 200 கிலோகிராம் போதைப்பொருள் படகில் கண்டுபிடிப்பு

 

பாகிஸ்தானிலிருந்து கடத்தியிருக்கலாமென சந்தேகம்

07 இலங்கை மீனவர்கள் கைது

சூத்திரதாரியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடுகிறது பொலிஸ்

தென்கடலில் கைப்பற்றப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் நிறையுடைய போதைப்பொருளை இலங்கையிலுள்ள மூவரே பாகிஸ்தானிலிருந்து கடத்தியிருக்க வேண்டுமென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து சந்தேகம் எழுந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார். இதேவேளை வெளிநாட்டிலிருந்து இப்போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பிய நபரை கண்டுபிடித்து கைதுசெய்வதற்காக இலங்கைப் பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறினார்.

காலி கடலில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகை கைப்பற்றிய கடற்படையினர் அதற்குள்ளிருந்த சுமார் 200 பைக்கற் பேதைப்பொருட்களுடன் ஏழு இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 02 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கைப்பற்றப்பட்டுள்ள பேதைப்பொருள் ஹெரோயின் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதன் மொத்த நிறை 224 கிலோ மற்றும் 160 கிராமென்றும் இதற்கமைய இதன் மொத்த பெறுமதி 02 பில்லியனிலும் அதிகமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்திலுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் நடத்தப்பட்டது. இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, -

இலங்கைக்கு தெற்கே கடலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு கடந்த 01 ஆம் திகதியன்று தகவல் கிடைத்திருந்தது. இதனடிப்படையில் கடற்படையினர் மிகவும் உஷார்நிலையில் தென்கடலை மேற்பார்வை செய்து வந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இலங்கை மீன்பிடிப் படகை தடுத்து சோதனை செய்தபோது அதில் எட்டு பாரிய பொலித்தீன் பைகளுக்குள் சுமார் 200 வெ ள்ளை நிற பொதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தின்போது இப்படகில் 05 இலங்கை மீனவர்களும் இருந்தனர். இம்மீன்பிடிப்படகிலுள்ள சந்தேகத்திற்கிடமான பொதிகள் தொடர்பில் பரீட்சிப்பதற்காக ஐவருடன் கூடிய மீன்பிடி படகு கொழும்பு துறைமுகம் நோக்கி கொண்டுவரப்பட்டது.

- லக்ஷ்மி பரசுராமன்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை