ராஜபக்ஷவினர் மீது இனவாத 'லேபல்' ஒட்டுவதற்கு சிலர் சதி

இனவாதம் பேசிய மதுமாதவுக்கு எதிராக உடன் நடவடிக்கை

ராஜபக்ஷவினர் இனவாதிகளென 'லேபல்' ஒட்டுவதற்கு சிலர் மேற்கொள்ளும் சதியில் முஸ்லிம்கள் சிக்கக் கூடாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன்வைத்த, மது மாதவ அரவிந்தவை கட்சியில் உள்ள சகல பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியுள்ளதாக கூறிய அவர், பொதுஜன பெரமுனவுடன் உள்ளவர்களோ வெளியில் உள்ளவர்களோ எவர் இனவாதம் பேசினாலும் அதற்கு எதிராக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று முன்தினம் இரவு தெஹிவளையில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய அவர், மதுமாதவ அரவிந்தவின் கீழ்த்தரமான வீடியோயை கண்டு நாம் மௌனமாக இருக்கவில்லை. இனவாதம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என எத்தரப்பில் இருந்து வந்தாலும் அதற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, கோட்டாபய, உதய கம்மம்பில் ஆகியோருடன் பேசினோம். ராஜபக்‌ஷவினர் இனவாதிகள் என 'லேபல்' ஒட்டுவதற்காக சிலர் மேற்கொள்ளும் சதியில் முஸ்லிம்கள் சிக்கக் கூடாது. இனவாதம் உள்ளே இருந்து வந்தாலும் வௌியில் இருந்த வந்தாலும் அதற்கு எதிராக செயற்படுவோம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பிரகாரம் கோட்டாபய 63 இலட்சம் வாக்குகளையும் சஜித் 41 இலட்சம் வாக்குகளையும் பெறுவர்.கோட்டாபய வெல்ல அதிக வாய்ப்பு உள்ள நிலையில் முஸ்லிம்களும் அவரின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டும்.

எமது ஆட்சியில் மீண்டும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்றோரை இணைக்கக் கூடாது. முஸ்லிம்களின் வாக்குகளை அடகு வைப்பவர்களால் முஸ்லிம்களுக்கு அவப் பெயரே ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய இனவாதியாக இருந்தால் அவருக்கு உதவ முன்வந்திருக்க மாட்டேன். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் அவரை நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

 

ஷம்ஸ் பாஹிம்

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை