உலக பெட்மிண்டன் போட்டி: நிலூக கருணாரத்ன பங்கேற்பு

இலங்கையின் பெட்மிண்டன் சம்பியனான நிலூக கருணாரத்ன இம்மாதம் 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் நடைபெறவுள்ள உலக பெட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

ஜப்பானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் நடாத்தவுள்ள கண்காட்சிப் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலூக கருணாரத்ன ஆசியாவின் அதிசிறந்த 28 பெட்மிண்டன் வீரர்களில் ஒருவராக இந்தப் போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளார்.

உலக பெட்மிண்டன் தரவரிசையில் 124ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அவர், இந்தத் தொடரில் பங்கேற்று 2020இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தகுதிபெறும் முனைப்புடன் உள்ளார்.

34 வயதான நிலூக கருணாரதன், கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற பெனின் சர்வதேச பெட்மிண்டன் போட்டித் தொடரில் பங்கேற்று தனது 9ஆவது தனிநபர் சம்பியன் பட்டத்தை வென்றார்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன் ஐவரிகோஸ்ட்டில் நடைபெற்ற பெட்மிண்டன் தொடரிலும் பங்கேற்ற அவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று உலக பெட்மிண்டன் தரவரிசையில் 37ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட நிலூக கருணாரத்னவுக்கு இம்மாதம் நடைபெறவுள்ள ஹேல்ஸ் சர்வதேச பெட்மிண்டன் தொடர் மற்றும் பல்கேரியா திறந்த பெட்மிண்டன் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பெட்மிண்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை