கோஹ்லியின் அபார சதத்தால் இந்திய அணி தொடர் வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

போர்ட் ஒப் ஸ்பெயினில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடியது.

மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

இதனையடுத்து டக்வர்த் லுவிஸ் முறைப்படி போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 35 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 240 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் கிறிஸ் கெயில் 72 ஓட்டங்கள் எடுத்தார்.

35 ஓவர்களில் 255 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற திருத்தப்பட்ட இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 32.3 ஓவரில் 256 ஓட்டங்கள் எடுத்து டக்வர்த் லுவிஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இந்தியா தரப்பில் அணித்தலைவர் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2–0 என இந்தியா வென்றது.

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை