ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 20ஆவது பெண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டத் தொடர் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தென் கொரியாவின் சோல் நகரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நேற்று தென் கொரியாவை நோக்கி பயணித்தது.
13 நாடுகள் பங்குபற்கும் இந்தத் தொடரில் டி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது. இதில் ஓகஸ்ட் 18ஆம் திகதி சீனாவுடன் மோவுள்ள இலங்கை அணி, 19ஆம் திகதி இந்தோனேஷியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணியின் தலைவியாக வாசனா மதுமாலி செயற்படவுள்ளதுடன், பயிற்சியாளராக கியூபாவைச் சேர்ந்த ரொபேட்டோ செபோராவும், உதவிப் பயிற்சியாளராக ஜானக இந்திரஜித்தும் செயற்படவுள்ளனர்.
இறுதியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டத் தொடரில் மியன்மார் அணி சம்பியனாகத் தெரிவாகியதுடன், 14 அணிகள் பங்குபற்றிய குறித்த தொடரில் இலங்கை அணி 13ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இந்தத் தொடரில் 13 தடவைகள் சீனாவும், 4 தடவைகள் ஜப்பானும் சம்பியன்களாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
from tkn