முஸ்லிம் திருமண சட்ட திருத்தம்; ஆராய நால்வர் அடங்கிய குழு

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு ஒரு வாரத்தில் இறுதி அறிக்கையை தயாரிக்க இருப்பதாக உலமா சபை பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் தெரிவித்தார். இந்தக் குழுவில் உலமா சபை தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி, அமைச்சர் ஹலீம், முன்னாள் அமைச்சர்களான

ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் அடங்குகின்றனர்.

முஸ்லிம் தனியார் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட குழுவொன்றை நியமித்ததோடு இது தொடர்பில் இரு அறிக்கைகள் நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்தன. நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் தலைமைகளில் இருவேறு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் தனியார் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துவது தொடர்பில் நீண்டகாலமாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு மட்டங்களில் இது தொடர்பாக ஆராயப்பட்டதோடு இறுதியில் இது சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பொறுப்பு முஸ்லிம் எம்.பிகளுக்கு வழங்கப்பட்டது.குறைந்த பட்ச திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்துதல், திருமணப் பதிவில் மணப்பெண் கட்டாயமாக கையொப்பம் இடுதல் உட்பட 11 விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிகளிடையே ஏற்கெனவே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ள நிலையில் முஸ்லிம் எம்.பிக்க ளுக்கும் உலமா சபை முக்கியஸ்தர்களுக்கும் இடையில் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் வீட்டில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் தற்போதைய நிலைமை குறித்தும் பாதகமின்றி இதனை கையாள்வது பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.சுமார் இருமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் நிறைவில் குழு நியமிக்கப்பட்டதோடு குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உலமா சபையும் முஸ்லிம் எம்.பிகளும் சந்தித்து இறுதி வரைபை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் எட்டப்படும் உடன்பாட்டின் பின்னர் இறுதி அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட இருப்பதாகவும் உலமா சபை பிரதி செயலாளர் மௌலவி தாஸிம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்,பைசர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம்,முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான, மொஹமட் நஸீர், தௌபீக், காதர் மஸ்தான், முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் உலமா சபை சார்பில் அதன் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ.முபாரக்,உப தலைவர் மௌலவி அப்துல் காலிக்,உப செயலாளர்களான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம், மௌலவி எம்.எம்.எம்.முர்ஷித் மற்றும் உலமை சபை உறுப்பினர்களான,மௌலவி ஹஸன் பரீத்,மௌலவி எஸ்.எல்.நௌபர், மௌலவி பாதில் பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

ஏற்கெனவே நீதி அமைச்சிற்கு கையளிக்கப்பட்ட இரு குழுக்களினதும் அறிக்கைகளின் பிரகாரம் பொருத்தமான அறிக்கையொன்றை நால்வரடங்கிய குழு தயாரிக்க இருப்பதாகவும் மௌலவி தாஸிம் கூறினார்.

காலதாமதமின்றி அவசரமான இந்த சர்ச்சைக்கு தீர்வு காண நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.(பா)

 

 ஷம்ஸ் பாஹிம்

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை