வர்த்தகர்களுக்கான நிவாரணத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முறையாகவும் வினைத்திறனாகவும் அதற்கான செயற்பாடுளை மேற்கொண்டு சுற்றுலாத்துறை வர்த்தகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றதுடன் வர்த்தக சமூகத்தினர் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்கள்தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாத்துறையை பாதிக்கும் காரணிகள், வரிகள் காரணமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வர்த்தகர்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியினூடாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் கீழ் மட்டத்திலுள்ள நிறுவனங்களால் குறித்த அறிவுறுத்தல்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமலுள்ளன.

இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, குறித்த அமைச்சரவை உப குழுவிலும் அமைச்சரவையிலும் கலந்துரையாடி தேவையான நிவாரண வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்துவதாகவும் தெரிவித்தார். (ஸ)

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை