காஷ்மீரில் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல்

இந்திய பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 14 -ம் திகதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலை புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருக்கிறது.  இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12மிராஜ் ரக போர் விமானங்களில் அதிகாலை 3.30மணிக்கு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள்மீது குண்டு மழை பொழிந்துள்ளது. இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பதிலடி தாக்குதலில், சுமார் 1000 கிலோ குண்டுகள் பல்வேறு தீவிரவாத முகாம்கள்மீது வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானங்கள் எல்லை தாண்டிப் பறந்ததை பாகிஸ்தானும் உறுதிசெய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டை மீறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், இந்திய பாதுகாப்புத்துறையோ இந்திய விமானப்படையோ இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

Tue, 02/26/2019 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை