இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களினதும், மதரசாக்களினதும் அபிவிருத்திக்கு முன்னுரிமைப்படுத்தி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கம்பெரலிய வேலைத் திட்டம் தொடர்பில் இப்பிரதேசங்களின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் நிர்வாகிகளுடன் நேற்றுமுன்தினம் (11) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் இப்பிரதேசங்களில் காபர்ட் வீதிகள் அமைத்தல், உள்ளக வீதிகளை கொங்றீட் வீதிகளாக புனரமைப்புச் செய்தல், கிராமிய பாலங்களை புனரமைத்தல், பல்தேவைக் கட்டடங்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் நடைபெற்ற கம்பெரலிய வேலைத்திட்டத்தில் இப்பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்திகளுக்கு தன்னால் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்னும் நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.
அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான வரைபுகளை துரிதமாக தயாரித்து ஒப்படைப்பதன் மூலம் அவற்றுக்கு நிதியொதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(கல்முனை விசேட நிருபர்)
from tkn