தமிழ் மக்களின் அபிலாசைகளை நிராகரிப்பவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தினை கோரி வருகின்ற நிலையில் தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் நிராகரிக்கின்ற ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவதன் ஊடாக தமிழ் மக்களை காலம், காலமாக ஏமாற்றி வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை தம்பட்டை மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் இறுதி நாள் நிகழ்வில் கடந்த (03) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
இன்று நாட்டில் காணப்படுகின்ற சுமுகமான அரசியல் சூழ்நிலைகள் காரணமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கூடியளவு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக காணப்படகின்றன. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் சாதகமாக கொண்டு தமிழர் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தமிழர்களுக்காக உரிமை ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில்தான் புதிய அரசியல் வரைவு ஒன்றினை கொண்டு வந்து அதனுடாக தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக முனைப்புக்களை காட்டி நிக்கின்ற சந்தர்ப்பத்தில், பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியில் வரைவு ஒன்று இந்த நாட்டுக்கு தேவையில்லை என்ற நிலையில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
(திருக்கோவில் தினகரன் நிருபர்)
from tkn