திருமலை காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

திருமலை மாவட்ட விசேட,   கிண்ணியா  மத்திய நிருபர்கள்  

திருகோணமலை மணல் அகழ்வு மற்றும் காணிப் பிரச்சினைகளை ஆராய ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.  

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,   திருகோணமலையில் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மணல் அகழ்வு சம்மந்தமாக ஆராய்ந்து உரிய தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்விடம் தான் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தேன்.  

இந்த கோரிக்கையை ஏற்ற ஆளுநர் இது சம்மந்தமாக ஆராய விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளார். இக்கலந்துரையாடலில் முப்படை உயரதிகாரிகள், வனவிலங்கு, தொல்பொருள் உயரதிகாரிகள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட இதனுடன் தொடர்புபட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.  

அண்மையில் மணல் அகழ்வின் போது கிண்ணியாவில் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அசம்பாவிதங்களும் எதிர்வரும் காலங்களில் ஏற்படுவதை தவிர்த்தல், சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்தல், மண் அகழ்வை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், முப்படையினருடனான சுமூக உறவு சம்மந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடி சுமூக தீர்வொன்றுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளோம். மேலும் படையினரின் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்தல் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.  

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் காணப்படும் காணிகளை முற்றாக விடுவித்தல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என படையினர் கருத்தும் காணிகளை அவர்கள் விடுவிக்கும் வரை நஷ்டஈடு மற்றும் வாடகையை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுகொடுப்பது தொடர்பான கோரிக்கைகளை முப்படையினரிடம் முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்தார்.  

Thu, 02/07/2019 - 06:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை