தேசிய கிரிக்கெட் அணி தெரிவு பயிற்றுவிப்பாளரின் அதிகாரம் குறைப்பு

இலங்கை கிரிக்கெட் தேசிய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது குறித்த சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களின் தெரிவு பற்றி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

புதிய அறிக்கையில் இலங்கை வீரர்கள் தெரிவு பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

“இலங்கை அணி சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் போது குறித்த சுற்றுப் பயணத்தின் போதான போட்டிகளில் ஆடும் வீரர்களை தெரிவு செய்வது இலங்கை அணி முகாமையாளர், அணித்தலைவர் மற்றும் தேர்வு உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே இடம்பெறும் “

எனவே, வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய அறிக்கையின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹதுருசிங்க, சுற்றுப் பயணங்களின் போது இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்கின்ற வாய்ப்பினை முழுமையாக இழக்கின்றார்.

ஹதுருசிங்க சுற்றுப் பயணங்களின் போதான போட்டிகளில் இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சினுடைய அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே, சுற்றுப் பயணங்களின் போதான இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்யும் பொறுப்பு இலங்கை அணி முகாமையாளர், அணித்தலைவர் மற்றும் தேர்வு உறுப்பினர்கள் அடங்கிய குழுவிடம் மட்டும் இலங்கை கிரிக்கெட்டால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் உடன் அமுலுக்கு வருவதால் அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் பொறுப்பினை இலங்கை அணி முகாமையாளர், அணித்தலைவர் மற்றும் தேர்வு உறுப்பினர்கள் அடங்கிய குழுவே எடுத்துக் கொள்கின்றது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியினை தழுவியிருப்பதால் கென்பரா நகரில் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரினை சமநிலைப்படுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை