குளவி கொட்டி கணவன் உயிரிழப்பு; மனைவி காயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதோடு, மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் நேற்று (30) மதியம் இடம் பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவனும், மனைவியும் தங்கள் மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்த போது பறந்து வந்து குளவிகள் இவர்களைக் கொட்டியுள்ளன.

குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட கணவர், உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் (வயது – 72) என தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை