மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மின்சார சபை முன்வைத்துள்ள யோசனை தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படுமென, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ அது தொடர்பாக தெரிவித்த போது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றையதினம் கூடுவதாகவும் மின் கட்டண திருத்தம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானத்துக்கிணங்க பிரதி வருடம் இரண்டு தடவைகள் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கிணங்க, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார சபையான கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அதற்கான யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்ததுடன், அது தொடர்பான செயற்பாடுகளை ஆணைக்குழு நேற்றுவரை முன்னெடுத்தது. அதற்காக, பொதுமக்களின் கருத்துகளையும் ஆணைக்குழு பெற்றுக்கொண்டதுடன், அதையும் மீளாய்வு செய்த பின்னர் இன்றையதினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்த யோசனைக்கிணங்க மின் கட்டணத்தில் 3 சதவீத கட்டணக் குறைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில பிரிவுகளுக்கு 26 சதவீத கட்டணக் குறைப்பும் யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn