வட அட்லான்ட்டிக் பெருங்கடலின் அடியில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் கப்பல் காணாமல்போன இடத்துக்கு அருகே சத்தம் கேட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
சோனார் எனும் ஒலி பரப்புதல் வழி தேடல் மீட்புக் குழுக்கள் சத்தத்தைக் கேட்டறிந்தனர்.
டைடன் எனப்படும் சுற்றுப்பயண நீர்மூழ்கிக் கப்பலில் 5 பயணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (18) மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்க்கச் சென்றிருந்தனர்.
பயணிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் முதல் அறிகுறியாக அந்தச் சத்தம் அமைகிறது. அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கேட்டுள்ளது.
என்றாலும் தொலைவில் இருந்து இயக்கப்படும் நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் இதுவரை எதிர்மறையான முடிவுகளையே தருகின்றபோதும் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வருவதாக கடலோரக் காவல் படையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பலில் ஒட்சிசன் குறைந்து வருவதால் அதனைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.
நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
from tkn