வடககல 194 படசலகள மடபபடடளள நலயல

கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்கிறார் வடக்கு ஆளுநர் வவுனியா விசேட, ஓமந்தை விசேட நிருபர்கள்

வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு (21) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது, வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்துக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும். வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டுள்ளன . இதற்கு காரணம் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும். இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமையும் ஒன்று. முதலாம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டம் காணப்படுகிறது.இதுவும் பாரிய பிரச்சினை என, பிரதேச செயலாளர்கள் அப்போது தெரிவித்தனர்.

எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழும் சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். சமூகத்தை வாழவைக்கும் வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, போன்ற பல்வேறு சமூக பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறையவே இருக்கின்றன.இதை, இங்கே கூடியுள்ள புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

 

Thu, 06/22/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை