தஜிகிஸ்தானில் 6.8 ரிச்டர் நிலநடுக்கம் பதிவு

- மக்கள் அடர்த்தி குறைந்த மலைப்பாங்கான பகுதியில் அதிர்ச்சி

தஜிகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் [USGS] தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் (00:37 GMT) சுமார் 20.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைக்கு அருகே இன்று (23) மு.ப. 8:37 (இலங்கை நேரப்படி மு.ப. 6.07) மணியளவில் சுமார் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீன அரச தொலைக்காட்சியான CCTV, சீன பூகம்ப வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சீன எல்லையில் இருந்து 82 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதோடு, ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய இடங்களில் வலுவாக உணரப்பட்டதாக CCTV தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் [EMSC] ஆரம்பத்தில் இதனை 7.1 ரிச்டர் என பதிவு செய்த போதிலும், பின்னர் அதனை 6.3 ஆக அறிவித்திருந்தது.

நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான நிலச்சரிவு அல்லது மக்கள் பாதிப்பு ஏற்படாது என USGS எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அரை-தன்னாட்சி கிழக்குப் பகுதியான கோர்னோ-படக்ஷானில் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.

இது குறைந்த மக்கள்தொகை கொண்ட, உயர்ந்த பாமிர் மலைகளால் சூழப்பட்ட பகுதி என தெரிவிக்கப்படுகிறது.

Thu, 02/23/2023 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை