இருவர் பலி, இருவருக்கு காயம்
அநுராதபுரம், தமுத்தேகம, கோன்வெவ பகுதியில் லொறியும், முச்சக்கர வண்டியுறும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
அநுராதபுரம் பாதெனிய பிரதான வீதியின் தமுத்தேகம கோன்வெவ பகுதியில், கடந்த (27) நேற்று மாலை 4.45 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர், சிகிச்சைக்காக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கல்கமுவ,மஹகல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட 24,29 வயதுடய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
தமுத்தேகம பகுதியிலிருந்து கல்கமுவ பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, அதே திசையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்வதற்கு முற்பட்டது.இதன்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிரிழந்த இருவருடய சடலங்கள் தற்சமயம் தம்புத்தேகம வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய ஊர்காவற்றுறை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 32 வயது சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் என்.ஏ.திலக்கரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தலாவ குறூப், அநுராதபுரம் தினகரன் நிருபர்கள்
from tkn