பாராளுமன்றை பாதுகாத்த படைவீரர்களுக்கு பாராட்டு

இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நன்றி தெரிவித்து கௌரவிப்பு

இப்போது பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்

நிறைவேற்றுத்துறையை கையகப்படுத்தி, சட்டத்துறையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு நேற்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அன்று வன்முறையாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சட்டத்துறையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும் எனவும் அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் மாற்றமாக அமைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அமைதியான முறையில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். இராணுவத் தலைமையக வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றதுடன், பின்னர் ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் உன்னத இடமான பாராளுமன்ற வளாகத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை வெற்றிகரமாக தடுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததோடு, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்தில் தோன்றியதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிதிகளின் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் இட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“பாராளுமன்றத்தைப் பாதுகாத்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே விஷேடமாக இதைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட விரும்பினேன். இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.

மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த 03 பிரதான நிறுவனங்கள் உள்ளன. பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை. இந்த 03 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசியலமைப்பு சிதையும். ஜனநாயகம் இழந்துவிடும். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில்தான் நீங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தீர்கள்.

நிகழ்வுகள் பற்றி பேசுகையில், ஜூலை 09, முன்னாள் ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகை வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது, பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை. மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான "அலரி மாளிகை" கையகப்படுத்தப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டுக்கு தீ வைத்தனர். ஆனால் சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் பிரதமர் அலுவலகம் மாத்திரம் இருந்தது.

கடந்த 13ஆம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்தை இயக்க எந்தவொரு அலுவலகமும் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிரைவேற்றுத்துறையாக, இயங்குவதற்கு எந்தவொரு இடமும் இருக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது. பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். பாராளுமன்றத்தை கைப்பற்றினால், சட்டத்துறையை அமல்படுத்த முடியாது. சட்டத்துறையை அமல்படுத்த முடியாவிட்டால், நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.

நீதிமன்றத்தை சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல அல்ல. பாராளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சினையாகிவிடும். அதன்படி பாராளுமன்றத்தை கைப்பற்ற வந்தவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. பாராளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. பாராளுமன்ற கட்டடத்தை பாதுகாத்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இடமளித்ததன் மூலம் அரசியலமைப்பு ரீதியான கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. உங்களின் நடவடிக்கை இப்போது முடிந்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இப்போது பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் தயவு செய்து இதனை பாராளுமன்றத்தில் நினைவூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை மீண்டும் நாட்டின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும்.

பிரதமர் தினேஷ் குணவர்தன , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Wed, 08/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை