மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க நடவடிக்ைக

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

05 ஆம் திகதி முதல் மின் வெட்டு இல்லை

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும்இன்று முதல் தடையின்றி  எரிபொருள் விநியோகம்

தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடலின் பிறகு, தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்வது, கையிருப்புகளைப் பராமரித்தல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. மார்ச் 05 முதல் மின்வெட்டு அமுலாகாதென அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் இன்று (03) முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான காமினி லொக்குகே, உதய கம்மன்பில, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர, மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர், அமைச்சு செயலாளர்கள் கலந்து கொண்டனர். (பா)

 

Thu, 03/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை