ஐந்து வாகனங்களை மோதித் தள்ளிய பேருந்து; சாரதி தப்பியோட்டம்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி பொது விளையாட்டு மைதான  சந்தியில்   பாரிய விபத்து சம்பவம் ஒன்று நேற்று  (11) மாலை இடம் பெற்றுள்ளது.

பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகனங்களை மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக விளையாட்டு மைதானம் நோக்கி பயணித்த பேருந்து மோதி தள்ளியுள்ளது.

குறித்த பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்சைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதி தள்ளியதில் முச்சக்கர வண்டி முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து சாரதி, அருகிலிருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து  மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(மன்னார் குறூப் நிருபர்)

Wed, 01/12/2022 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை