நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து இந்நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையானது, தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அளகப்பெருமவிடம் கையளிக்ககப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து டலஸ் அளகப்பெரும அதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ரூ. 45 மற்றும் ரூ. 15 ஆகிய பெறுமதிகளைக் கொண்ட முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன.
முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற சித்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை நத்தார் தின நினைவு முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலய மாணவன் நிமேஷ் சமத் பெரேரா மற்றும் நுகேகொடை அனுலா வித்தியாலய மாணவி ஷினாலி ருவண்யா பீரிஸ் ஆகியோரின் சித்திரங்கள் இப்போட்டியில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா மாணவனினால் வரையப்பட்ட பிரதமரின் உருவப்படம் இதன்போது அம்மாணவனினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது. கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவியும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தார்.
கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் மற்றும் கலாநிதி செக்டஸ் குருகுலசூரிய மற்றும் பர்ட்ரம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
from tkn