ஹெய்ட்டியில் எரிபொருள் டாங்கர் வெடித்து 60க்கு மேற்பட்டோர் பலி

வடக்கு ஹெய்ட்டியில் எரிபொருள் டாங்கர் ஒன்று வெடித்து 60க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கேப் ஹெடிடின் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றிருப்பதோடு டாங்கரில் இருந்து கசியும் எரிபொருளை சேகரிக்க வந்தவர்களே அது தீப்பற்றியதில் பலியாகியுள்ளனர்.

இந்த வெடிப்பில் காயமடைந்தவர்களால் உள்ளுர் மருத்துவமனை நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தினால் ஒட்டுமொத்த ஹெய்ட்டியும் கவலை அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பிரதமர் எரியேல் ஹென்ரி, மூன்று நாள் துக்கதினத்தை அறிவித்துள்ளார்.

ஹெய்ட்டியின் இரண்டாவது மிகப்பெரிய நகரில் இடம்பெற்ற இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் தீ பரவி இருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. வெடிப்பு இடம்பெற்ற பகுதி நரகம் போல் இருப்பதாக பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பலரும் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“மோசமான தீக்காயத்திற்கு உள்ளான பலருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடிய திறன் எம்மிடம் இல்லை” என்று ஜெஸ்டினின் பல்கலைக்கழக மருத்துவமனை தாதி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். “அவர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று நாம் அஞ்சுகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக அந்தப் பகுதியில் கள வைத்தியசாலைகளை அமைத்திருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது. பிரதமர் ஹென்ரி மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுடன் சேர்ந்து சம்பவ இடத்தை கடந்த செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

இந்த வெடிப்பினால் அருகில் இருக்கும் சுமார் 20 வீடுகளும் தீப்பற்றியுள்ளன.

 

Thu, 12/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை