அவுஸ்திரேலிய பிரதமர் பொய் கூறியதாக பிரான்ஸ் ஜனாதிபதி குற்றச்சாட்டு

இரு நாடுகளுக்கும் இடையிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தன்னிடம் பொய் கூறியதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கூறியுள்ளார்.

ஸ்கொட் மொரிசன் உண்மையாக இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா என பிரான்ஸ் ஜனாதிபதியிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு “எனக்கு தெரியும் என்று நான் கருதவில்லை” என பதிலளித்தார்.

அவுஸ்திரேலியா 37 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 12 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு மக்ரோன் மிகவும் கடிந்து கொண்டார்.

அதே நேரத்தில், மொரிசன் நேர்மையாக இல்லை என்ற கருத்தையும் மறுத்தார்.

செப்டம்பர் மாதம் இந்த பிரச்சினை ஆரம்பித்த பின்னர், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் ஜி20 உச்சி மாநாட்டில்தான் நேரடியாக சந்தித்துக் கொள்கின்றனர்.

மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் மொரிசனை நம்புவீர்களா என ஜனாதிபதி மக்ரோனிடம் ஓர் அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் கேட்ட போது “அவர் என்ன செய்யவிருக்கிறார் என நாம் பார்ப்போம்” என பதிலளித்தார்.

“உங்கள் நாட்டின் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. உங்கள் நாட்டு மக்கள் மீது நிறைய மரியாதையும், நட்பும் உள்ளது. உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது, நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் அந்த மதிப்போடு சொன்ன சொல்படி நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

பிரான்ஸ் நாட்டுக்கான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு கசப்பான மோதலை உருவாக்கியது.

இந்த ஒப்பந்த ரத்து, “எங்கள் முதுகில் குத்தும் செயல்” என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர்களும் தற்காலிகமாக திரும்ப அழைக்கப்பட்டார்கள்.

மக்ரோனின் கருத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மொரிசன், தான் ஜனாதிபதி மக்ரோனிடம் பொய் சொல்லவில்லை என்று கூறினார். மேலும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யாது எனவும் விளக்கியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் நம்பிக்கை மற்றும் நட்புறவை மீண்டும் கட்டமைக்கும் பணிகளை இருநாடுகளும் ஆரம்பித்திருப்பதாக மொரிசன் குறிப்பிட்டார்.

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை