A-30 பிறழ்வு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டாம்

அவதானமாக இருப்பதாக Dr. சந்திம தெரிவிப்பு

உலகின் சில நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஏ.30 பிறழ்வை எண்ணி அச்சப்படத் தேவையில்லை. இப் பிறழ்வு இதுவரையில் உலகளாவிய ரீதியில் பரவலடையவில்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அத்தியாவசியமானதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

'ஏ.30' வைரஸ் பிறழ்வு தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், ஜீ.ஐ.எஸ்.ஏ.ஐ.டீ. தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட மரபணுக்களில் 05 மாத்திரமே ஏ.30 பரம்பரையைச் சேர்ந்தவையாகும்.

அங்கோலாவில் 03, சுவீடன் மற்றும் பிரிட்டனில் ஒன்று என இந்த பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மே மற்றும் ஜூன் மாதங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளாகும்.

அங்கோலாவில் ஏ.30 பிறழ்வுடன் காணப்பட்ட மூவரும் 20, 23 மற்றும் 26 வயதுகளையுடைய ஆண்களாவர். இவர்களது மாதிரிகள் கடந்த பெப்ரவரியில் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். இவர்கள் மூவரும் ஆபிரிக்காவிற்கு சென்றுள்ளமையும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் மற்றும் சுவீடனில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் தொடர்பில் போதியளவு தரவுகள் சேகரிக்கப்படவில்லை.

எனினும் கொவிட்19 சோதனைகள் குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளில் இந்த பிறழ்வு கண்டறியப்படாமலிருப்பதற்கான வாய்ப்புக்களுள்ளன.

இது தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள செய்திகள் மக்களை அநாவசிய பீதிக்குள்ளாக்கக் கூடும். எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அத்தியாவசியமானதாகுமென்று தெரிவித்துள்ளார்.

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை