மக்களின் எதிர்பார்ப்புகளை வெற்றி கொள்வதே நோக்கம்

SLPP கட்சி ஆரம்பம் குறித்து ஜனாதிபதி

காலத்தின் தேவை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ளச் செய்யும் நோக்கத்திலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாடு, நேற்று (02) தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற போது, அதற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இணைந்து கொண்ட ஜனாதிபதி, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தியல் தெளிவாக உள்ளமையால், அதன் நோக்கமும் தெளிவாக இருக்கின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒற்றையாட்சி, இறையாண்மை கொண்ட தேசம், வளமான அரசு ஒன்றுக்காக வரலாற்றில் அழிக்க முடியாத பாரிய பொறுப்புகளை தற்போதும் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்காக முன் நிற்பதாக மக்களுக்கு கூறிய அன்றைய அரசாங்கம், நாட்டின் இருப்புக்கு அடிப்படையாக அமையக்கூடிய தேசிய பாதுகாப்பை ஒழித்துக்கட்டியது மாத்தரமன்றி, அடிப்படைவாதக் குழுக்கள் போஷிப்பதற்கான சூழலை உருவாக்கி, மத ஒழிப்புக்கு நாட்டில் வாய்ப்பை ஏற்படுத்தியதாக எடுத்துரைத்த ஜனாதிபதி, நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்த தேசிய பாதுகாப்பை இன்று உறுதிசெய்துள்ளதோடு, அன்றிருந்த அவநம்பிக்கை, எதிர்பார்ப்பற்ற நிலையை இல்லாதொழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான நிதி நிறுவனமான மத்திய வங்கியைக் கொள்ளையடித்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மரண அடியின் மோசமான விளைவுகளை இன்றும் இந்நாடு அனுபவித்து வருவதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டுமக்களின் வாழ்க்கைச் செலவை இரண்டு மூன்று மடங்காக்கியதும் அவர்களே என்றும் அபிவிருத்தியை நிறுத்தி உற்பத்திப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்த முறைமையை பொருளாதார நிபுணர்கள் கூட சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். அநியாயமாகச் சமூகத்தைப் பாதிப்படையச் செய்யும் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அன்று ஜனநாயக ரீதியாக உருவாகியது. புதிய அரசியல் கட்சியாக மக்கள் கருத்துகளை மிகச் சரியாக உள்வாங்கியதன் காரணமாக, பாரிய மக்கள் விருப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டதாகவும், மக்கள் மையபொருளாதாரம் ஒன்றுக்காக “சுபீட்சத்தின்நோக்கு” கொள்கையை ஜனநாயக ரீதியாக பாரிய வெற்றியடையச் செய்தது கட்சியின் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனுமாகுமென்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“நியாயமான மற்றும் நீதியான விமர்சனங்களுக்கு இன்று இந்நாட்டில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் இணைந்த பாதாள உலகக் கோஷ்டிகளின் செயற்பாடுகள் இன்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பசுமை விவசாயக் கைத்தொழிலை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம், முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. அரச சேவை மறுசீரமைக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் அறிவு மற்றும் திறமைக்கு நாட்டைக் கட்டியெழுப்பச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஏழ்மையில் வாழ்ந்த, திறன்கள் குறைந்த இளைஞர்,யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான நாடொன்றை உருவாக்கும் எதிர்பார்ப்பிலேயே, மக்கள் மையப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் தேசிய பொருாளாதாரக் கட்டமைப்பொன்றுக்காக சவால் மிக்க தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது. அதற்காக, பொதுஜன பெரமுனவின் அரசியல் பயன்பாடு ஒரு தீர்மானமிக்க காரணியாகும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை