50 பேருக்கே அனுமதி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி சகல பள்ளிவாசல்களிலும் 'மவ்லிதுர் ரஸுல்' வைபவத்தை ஐம்பது 50 பேர் பங்குபற்றுதலுடன் நாளை 19 ஆம் திகதி நடாத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
பிரதமரின் முஸ்லிம் சமய, கலாசார விவகாரங்ளுக்குப் பொறுப்பான இணைப்பாளர் அஸ் ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா மீலாத் தின விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களில் மவ்லிதுர் ரஸுல் வைபவத்தை 19 ஆம் திகதி நடாத்தவும் அவ்வைபவத்தில் ஐம்பது பேர் வரை பங்குபற்ற அனுமதி வழங்குமாறும் எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளுக்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்அனுமதியை எழுத்துமூலம் வழங்கியுள்ளார்.
அத்தோடு கொவிட் தொற்று தவிர்ப்புக்கென தற்போது நடைறையில் இருக்கும் சட்ட திட்டங்களைப் பின்பற்றி இவ்வைபவத்தை மேற்கொள்ளுமாறும் அவர் அந்த அனுமதிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கலாநிதி ஹஸன் மௌலானா குறிப்பிடுகையில்,
தாம் எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியை வழங்கியுள்ளார். அதற்கேற்ப இலங்கை வக்ப் சபை பள்ளிவாசல்களில் நாளை 19 ஆம் திகதி மௌலீதுர் ரஸுல் வைபவத்தை நடத்துவதற்கான வழிகாட்டல்களை விரைவில் வழங்கும் என்றும் அந்த ஒழுங்குகளை முழுமையாகப் பின்பற்றி இவ்வைபவங்களை மேற்கொள்ளுமாறும் முஸ்லிம்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
from tkn