இருதரப்பு பரஸ்பர உறவுகள் குறித்து ஸ்டாலின் - ஜீவன் பேச்சு

மலையக பல்கலைக்கழகம் குறித்தும் விபரிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்குமிடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இராஜாங்க அமைச்சரின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது (01) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழ் நாட்டுக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் மலையகத்திற்குமிடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் மலையகத்திற்கான அபிவிருத்தி பணிகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழக முதலமைச்சரை கடந்த 01 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளமையை தமிழ் நாட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். மேலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் இந்திய சட்டபேரவையில் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு, கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பான நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்தார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம் மக்களுக்கு அறிவித்துள்ள இந் நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது தெரிவித்தேன் மேலும் இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குமிடையிலான உறவு நீடிக்கும் எனவும் தெரிவித்தேன். இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் எனவும் நம்பிக்கை கொள்கின்றேன் என்றார்.

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை