புதிய அரசை அறிவிக்கத் தயாராகும் தலிபான்கள்: பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசொன்றை அமைக்க தயாராகி இருக்கும் நிலையில் தாம் வேலைக்குச் செல்லும் உரிமைக்காக பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1996 தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானில் கடுமையாக ஆட்சி ஒன்றை நடத்திய தலிபான்கள் மென்மைப் போக்குடைய ஆட்சி நிர்வாகம் பற்றி உறுதி அளித்துள்ளனர். இதனால் ஒரு கிளர்ச்சிக் குழுவில் இருந்து அரச அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தலிபான்கள் முகம்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தலிபான்களின் இரு தரப்புகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி சில நாட்களிலேயே தலிபான்கள் புதிய அரசு ஒன்று பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். அமெரிக்காவின் வெளியேற்றத்தை அடுத்து அந்தக் குழு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி காபுலை கைப்பற்றிய பின் மிக முக்கிய நிகழ்வாக தலிபான்கள் கடந்த புதன்கிழமை இராணுவ ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதில் மோதலின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எடுத்தச் செல்லப்பட்டதோடு தலிபான்களின் கோட்டையாக கருதப்படும் கந்தஹார் வானுக்கு மேலால் பிளக் ஹவுக்கு ஹெலிகொப்டர் ஒன்றும் பறக்கச்செய்யப்பட்டது.

இந்நிலையில் போரினால் மோசமடைந்திருக்கும் பொருளாதாரத்தை கையாள்வது மற்றும் உறுதி அளிக்கப்பட்டவாறு அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அரசு ஒன்றை தலிபான்கள் உருவாக்குவார்களா என்பது தொடர்பிலேயே தற்போது அவதானம் சென்றுள்ளது.

புதிய அரசு பற்றி ஊகங்கள் பரவலாக உள்ளன. எனினும் இதில் பெண்கள் உட்படுத்தப்படுவது சாத்தியமில்லை என்று தலிபான் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த புதன்கிழமை கூறி இருந்தார்.

‘பெண்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லலாம் என்றபோதும் எதிர்கால அமைச்சரவையில் அல்லது வேறு எந்த ஒரு பதவியிலும் அவர்களுக்கு இடமில்லை’ என்று கடும்போக்காளரான தலிபான் மூத்த தலைவர் செர் முஹமது அப்பாஸ் ஸ்டனிக்சாய் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மேற்கு நகரான ஹெராட்ஸில் சுமார் 50 பெண்கள் வீதிக்கு இறங்கி தமக்கான வேலைக்குச் செல்லும் உரிமை மற்றும் புதிய அரசில் பெண்களுக்கு இடமில்லாததை எதிர்த்து கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘கல்வி, வேலை மற்றும் பாதுகாப்பு எமது உரிமையாகும்’ என்று அந்தப் பெண்கள் கோசம் எழுப்பியதாக அந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்த ஏ.எப்.பி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாம் ஒற்றுமைப்பட்டுள்ளோம். பயப்படமாட்டோம்’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் நாட்டு எல்லைக்கு அருகில் இருக்கும் பண்டைய பட்டுப்பாதை வீதியில் அமைந்துள்ள ஹெராட்ஸ் ஒப்பீட்டளவில் தனிச்சார்பற்ற நகராகும். ஆப்கானிஸ்தானின் வளம்மிக்க பகுதியாக இருக்கும் இங்கு பெண்கள் ஏற்கனவே பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க ஆரம்பித்துள்ளனர்.

புதிய அமைச்சரவையில் பெண்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான பசிரா தஹரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

‘தலிபான்கள் எம்மிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவர்களின் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்புகளில் எந்த பெண்களையும் எம்மால் பார்க்க முடியவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையில் மேற்கொண்ட வெளியேற்ற நடவடிக்கை மூலம் 122,000 பேர் வரை ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் ஒருவராக தலிபான்களை நேர்காணல் செய்த பெண் ஊடகவியலாளர் ஒருவரும் ஆப்கானில் இருந்து வெளியேறியுள்ளார்.

டோலோ செய்தி ஊடக குழுமத்தின் முன்னாள் தொகுப்பாளரான அந்தப் பெண் கட்டாரில் இருந்து ஏ.எப்.பிக்கு அளித்த பேட்டியில், ஆப்கானில் பெண்கள் மிக மோசமான நிலையை சந்தித்திருப்பதாக குறிப்பிட்டார்.

‘ஆப்கான் பெண்களுக்கான (உங்களால் முடிந்த) எதையேனும் செய்யுங்கள் என்று சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பெஹஷ்டா ஆர்கன்ட் என்ற அந்தப் பெண் கேட்டுக்கொண்டார்.

பெண் உரிமை மாத்திரம் அன்றி ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தலிபான்கள் புதிய அரசை அமைக்கவுள்ளனர்.

‘தலிபான்களின் வருகையை அடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பட்டபோதும் வர்த்தகங்கள் பூஜ்யத்திற்கு இறங்கிவிட்டன’ என்று இலத்திரனியல் பொருட்களை விற்கும் கடை உரிமையாளர் ஒருவரான கரீம் ஜான் ஏ.எப்.பிக்கு தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ‘மனிதாபிமான நெருக்கடி’ ஒன்று பற்றி ஐக்கிய நாடுகள் சபை இந்த வார ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. புதிய அரசில் இருந்து தப்பிச் செல்ல விரும்புபவர்கள் இன்னும் வெளியேறிவிடவில்லை என்று அது குறிப்பிட்டது.

மனிதாபிமான கண்ணோட்டத்தில் ஆப்கானிஸ்தான் சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக உணவு விலை 50தவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 வீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது. 

பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாதுள்ளது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும். மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ரமீஸ் அலாக்பரோவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடைகள் போல ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு குடும்பம், குடும்பமாக நடந்து சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானிய அகதிகளை ஏற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறினாலும் ஸ்பின் போல்டாக் சாமன் எல்லை மூடப்படவில்லை. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் அந்த எல்லை வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் புகுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு செயற்கைகோள் படங்களை ஆதாரமாக காட்டப்படுகின்றன.

மறுபுறம் ஈரானும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது. தனது 3 மாகாணங்களில் அது அகதிகளுக்காக அவசர கால கூடாரங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால், அகதிகள் திரும்பித்தாயகம் போய்விட வேண்டும் என்று கூறி அனுமதிக்கிறார்கள்.

தஜிகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஏற்கனவே அடைக்கலம் அடைந்துவிட்டனர். உஸ்பெகிஸ்தானிலும் சில ஆயிரம் அகதிகள் மறுவாழ்வு தேடிச்சென்றுள்ளனர்.

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை