2020ஆம் ஆண்டில் உலகெங்கிலும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 227 பேர் கொல்லப்பட்டதாக ஆய்வொன்று தகவல் அளித்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் காடுகள், இயற்கை வளங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ‘கிளோபல் விட்னஸ்’ எனும் மனித உரிமைக் குழு நடத்திய ஆய்வு கூறியது.
கொலம்பியாவில் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலம், காடுகள் அல்லது கோக்கோ பயிர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முயன்ற சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர்.
அதுபோன்ற காரணத்துக்காக உலகில் மிக அதிகமானோர் கொலம்பியாவில் கொல்லப்பட்டனர் என்று ஆய்வு கண்டறிந்தது.அதற்கு இரண்டாம் நிலையில் மெக்சிகோ உள்ளது. அங்கு 30 பேர், காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டனர்.
பிலிப்பைன்ஸில் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 29 பேர். அவர்கள் சுரங்கவேலைகள், மரம் வெட்டுதல், அணை கட்டும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தும் முயற்சியின்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
கால நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை 2015 ஆம் ஆண்டு கைச்சாத்தானது தொடக்கம் ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கு இயற்கை ஆர்வலர்கள் கொல்லப்படுவதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
from tkn