ஆப்கானில் தலிபான் முற்றுகையிட்ட மூன்று நகரங்களில் உக்கிர மோதல்

ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள மூன்று பிரதான நகரங்களை முற்றுகையிட்டு அரச படைகளிடம் இருந்து தலிபான்கள் கைப்பற்ற முயற்சிக்கும் நிலையில் அந்த நகரங்களில் மோதல் உக்கிரடைந்துள்ளது.

ஹெரத், லஷ்கர் காஹ் மற்றும் கந்தஹார் ஆகிய நகரங்களுக்குள் தலிபான் போராளிகள் நுழைந்துள்ளனர்.

அனைத்து வெளிநாட்டு துருப்புகளும் செப்டெம்பர் மாதம் ஆப்கானில் இருந்து வெளியேறும் அறிவுப்பு வெளியானதன் பின் தலிபான்கள் நாட்டின் கிராமப் பகுதிகளில் வேகமாக முன்னேற்றம் கண்டனர்.

மேல் குறிப்பிட்ட மூன்று நகரங்களின் நிலை என்னவாகும், அரசுப் படைகளால் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை.

ஏற்கனவே தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதி பகுதிகளைக் கைப்பற்றிவிட்டனர். இதில் ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகளும் அடக்கம்.

சனிக்கிழமை நிலவரப்படி, லஷ்கர் காஹ் பகுதியில் ஆளுநர் அலுவலகத்துக்கு சில நூறு மீற்றர் தொலைவு வரை தலிபான்கள் முன்னேறிவிட்டனர். பொழுது சாய்ந்ததால் சற்று பின்தங்கினர்.

கடந்த சில நாட்களில் தலிபான்கள் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய முயற்சி இது. ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளின் கமாண்டரோ, கடந்த வெள்ளிக்கிழமை தலிபான்களுக்கு மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தியதாகவும் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.

கந்தஹார் மாகாணம் தலிபான்களின் பிடியில் செல்லும் அபாயம் இருப்பதாக, அம்மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குல் அஹ்மத் கமின் கூறியுள்ளார். ஒவ்வொரு மணி நேரமும், போர் சூழல் மோசமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்நகரத்துக்குள் போர் தீவிரமடைந்துள்ளது என்கிறார் கமின்.தலிபான்கள் காந்தஹாரை ஒரு முக்கிய புள்ளியாகப் பார்க்கிறார்கள். இந்நகரத்தை தங்களின் தற்காலிக தலைநகராக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். ஒருவேளை கந்தஹார் அவர்கள் வசமானால், அப்பிராந்தியத்தில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு மாகாணங்களும் அவர்கள் வசமாகிவிடும் என்கிறார் கமின்.

தலிபான்கள் நகரத்தின் பல முனைகளில் இருக்கின்றனர். இந்த நகரத்தில் அதிக மக்கள் வாழ்வதால், தலிபான்கள் முழுமையாக நுழைந்தால் கூட அரசுப் படைகளால் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் ஐந்து வெவ்வேறு இடங்களில் போர் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இப்போதும் வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் கூட விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக வளாகத்துக்கு வெளியே காவலுக்கு இருந்த ஒரு வீரர் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார். தலிபான்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதல் இது என ஐ.நா சபை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை மக்கள் பாதுகாப்பான இடங்களாகக் கருதுகின்றனர். சிலரோ தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளனர்.

தலிபான்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நவம்பர் 2001இல் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான்களின் ஆட்சியை ஒடுக்கியது. மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களைத் தயார்படுத்திய போதும், தலிபான்கள் மீண்டும் ஒன்றிணைந்து வலிமை பெற்றனர்.

கடந்த பெப்ரவரி 2020இல், ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகளைப் பின்வாங்க, தலிபான்களுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டார். 2021ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதத்துக்குள் பின்வாங்கப்படும் என அறிவித்தார்.

Mon, 08/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை