நைஜீரிய விமானப்படை விமானம் ஒன்று அந்நாட்டு கொள்ளைக்காரர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.
அந்த விமானம் கடத்தல்காரர்களுக்கு எதிராக வான் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு முடிந்த நிலையில் திடீர் தாக்குதல் ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக நைஜீரிய விமானப் படை தெரிவித்துள்ளது.
விமானத்தின் விமானியான லெப்டினன்ட் அபயோமி டைரோ விமானத்தில் இருந்து விடுபட்டு, குற்றக்கும்பலிடம் இருந்த தப்பி பாதுகாப்பாக தமது படை முகாமை அடைந்துள்ளார்.
வடக்கு சம்பாரா மற்றும் கடுனா மாநிலங்களின் எல்லையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொள்ளைக்காரர்கள் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் இந்த ஆயுத கும்பலே வட மேற்கு நைஜீரியாவில் அண்மைக் காலத்தில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைத்து இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்களில் கடந்த டிசம்பர் தொடக்கம் 1,000க்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணத்தை பெற்று கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த குற்றக் கும்பலுக்கு எதிராக நைஜீரிய விமாப்படை அண்மைக்காலத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் அண்மைக்காலத்தில் பல இராணுவ விமானங்கள் விபத்துக்கு உள்ளான சம்பவங்கள் பதிவானபோது அவ்வாறான விமானம் ஒன்றை குற்றக் கும்பல் சுட்டுவீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
from tkn