அடைக்கலம் புகுந்த உறவுகளை அரவணைத்து செயற்பட கோரிக்கை

ஸ்டாலினுக்கு செல்வம் MP அவசர கடிதம்

 

இந்தியாவில் தமிழ்நாட்டு முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு முகாமில் விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த அவசர கடிதத்தை நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கை வாழ் தமிழ் மக்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றிவந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாதகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்பத் தலைவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு முகாமில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்களெனவும் நான் நம்புகிறேன் என அந்த கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Tue, 06/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை