மீன்பிடி உபகரணங்களுக்கு இனிமேல் நிர்ணய விலை

அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி

 

மீன்பிடி உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். நீர்கொழும்பு மாநகர சபை மண்டப கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு  தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இச் சந்திப்பின் போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளினால் கூறப்பட்டது.

குறிப்பாக, தரமற்ற வலைகளே சந்தைக்கு வருவதாகவும் வலைகளை ஆறு மாதங்கள் வரையிலேயே பயன்படுத்தக் கூடியதாக இருப்பதனால் செலவினங்கள் அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

அதேபோன்று, கடற்றொழில்சார் உபகரணங்களுக்கு நிர்ணய விலையின்மையால் வியாபாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களைப் புரிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தரமான கடற்றொழில் சார் உபகரணங்கள் நியாயமான விலையில் சந்தையில் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு கவனம் செலுத்துமென்று உறுதியளித்தார்.

இவ் விடயங்களை அமுல்ப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல் விடுத்தார்.

 

Tue, 06/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை