நிர்வாகத்துக்கு எதிராக போட்ரி தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினூடக 1000 ரூபா சம்பள அதிகரிப்பினை தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். சம்பள அதிகரிப்பினை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன. பல தோட்டங்களில் தோட்ட நிர்வாகங்கள் இதுவரை பறித்து வந்த 14,16 கிலோ தேயிலை கொழுந்துக்கு பதிலாக 20 கிலோ தேயிலை கொழுந்தை பறித்த தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாக தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தொழிற் சங்கங்கள் மௌனம் சாதித்து வருவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 20 கிலோ தேயிலை கொழுந்து பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் போட்ரி தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளொன்றின் பெயருக்கான கொழுந்தின் அளவை 20 கி​ேலாவாக பறித்து தந்தால் தொடர்ச்சியாக வேலை தருவதாக தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவதாக தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வழமையாக பறிக்கும் 18 கிலோ கொழுந்துக்காக வாரம் 3 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுமென தோட்ட நிர்வாகம் கூறியமையால் கடந்த வாரங்களில் மக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கம்பனிகள் மக்களுக்கு வழமையான முறையில் வேலையை வழங்கி வரும் நிலையில் களனிவெளி நிறுவனம் இவ்வாறான நடைமுறையில் மக்களை முடக்க முற்படுவது கவலைக்குரிய விடயம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே நேரம் கொரோனா தொற்று காரணமாக தோட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு நாள் சம்பளமோ நிவாரணமோ வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் தோட்டங்களில் இன்று பெருவாரியான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

Wed, 05/19/2021 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை