நுவரெலியாவில் சிரேஷ்ட அரசியல், தொழிற்சங்கவாதியாக செயல்பட்டு வந்த தனுஸ்கோடி மாதவன் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இறக்கும் போது இவருக்கு வயது 71. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் இவர் நுவரெலியா பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவின் பிராந்திய தொற்றியியல் பணிப்பாளர் மதுர செனிவிரத்ன தெரிவித்தார்.
நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அமரர் டி.மாதவன் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா பிரதிநிதியாக 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் நன்மதிப்பு பெற்று செயற்பட்ட மூத்த தொழிற்சங்கவாதியாவார்.
நுவரெலியா, பதுளை மற்றும் ஹற்றன் போன்ற இடங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதியாகவும் தொழிலுறவு அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார்.
( நுவரெலியா தினகரன் நிருபர்)
from tkn